காதல் சொல்ல வந்தேன் - விமர்சனம்
படம் முடியிறதுக்கு முந்துன வினாடி வரை கலகலன்னு சிரிக்க வைக்கிற படம் காதல் சொல்ல வந்தேன். திரைக்கதை கொஞ்சம் நழுவி இருந்தாலும் பாலியல் படமாகி பார்ப்பவர்களை நெளிய வைக்கும் ஒருவரிக்கதையை எடுத்துக்கொண்டு அட்டகாசமாக மிரட்டி இருக்கிறார் பூபதி பாண்டியன்.
கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும் பாலாஜிக்கு இறுதியாண்டு படிக்கும் மேக்னா சுந்தர் மீது பார்த்த உடனே காதல் வந்து விடுகிறது. நட்பு அடிப்படையில் பாலாஜியுடன் மிக சகஜமாக பழகுகிறார் மேக்னா. தன்னை பாலாஜி காதலிக்கிற சேதி அறிந்து கொதிக்கிறார். அக்கான்னு கூப்பிடுறான்னு அதிரடி ஆட்டம் போடுவது அசத்தலான இடைவேளை.
எப்பாடு பட்டாலும் உன்னை காதலியாக கைப்பிடித்தே தீருவேன் என்று மறுபடியும் முயற்சி படலத்தை தொடர்கிறார் பாலாஜி. இதற்கிடையில் பையனின் காதல் பைத்தியம் அறிந்து கல்லூரியை விட்டே நிறுத்தி விடுகிறார்கள் பாசக்கார பெற்றோர்.
கடைசியாக பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறார் பாலாஜி. நீ வந்தா காதல், வராட்டி சாதல்னு கடிதம் கொடுத்து அனுப்புகிறார். அதுவும் தினசரி கல்லூரிக்கு வர்ற பஸ்ல விழுந்துன்னு படபடக்கவைக்கிறார். டிராமா தான். பரிட்சை ஹாலில் விஷயத்தை தெரியும் மேக்னா ஓடி வர்ற.... பாலாஜி போட்ட கணக்கு தப்புனாலும் பஸ் டிரைவர் டிராமாவை சரியாகவே முடிக்கிறார். ஆனா... விதியின் கணக்கு வேறாக இருப்பதால் நடுவீதியில் ரத்தம் சொட்ட சொட்ட பாலாஜி, ஆக்ஸிடெண்டில் சாகிறார். சாகடிக்கப்படுகிறார்.
படம் முழுக்க சிரிக்க வைக்கிறதுனால கடைசியில கனமான சோகம் இருக்கட்டும்னு தப்புக்கணக்கு போட்டிருக்காரு இயக்குனர் பூபதி பாண்டியன். காமெடி ஸ்கிரிப்ட்டுன்னா அதுல பூபதிபாண்டியன் கொம்பன்தான் என்று நிஜமாக பூரிக்க வைக்கிறார். குசு மாதிரி சவுண்ட் போடுற ஒரு கையடக்க மெஷின் காட்டுறாரே அது செம கலகல. அதுவும் சபேஷ் கார்த்திக் காமெடி ஏரியாவுக்கு நல்ல புதுவரவு. மன்னன் அதிர அதிர குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறார்.
பாலாஜி தேர்ந்த நடிப்பில் மிரட்டுகிறார். தனுஷ் கால்ஷீட்டை எதிர்பார்த்து கதை வைத்திருப்பர்கள் பாலாஜியை நாடலாம். மேக்னா சுந்தர் பக்குவப்பட் பாத்திரத்தில் அனுபவசாலி போல நடித்திருக்கிறார்.
யுவன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. சந்தியா உன்னை காதலிக்கிறேன் பாட்டு பசங்களோட மனசுல பச்சக்னு ஒட்டிக்கும்.
நாய் வளர்க்கிறவன்லாம் பணக்காரன்னா திருச்சியில பெரிய பணக்காரன் நான்தான், உன்னையும் உங்கம்மாவையும் வளர்க்கிறேனே... என ஆர்.சுந்தராஜன் அலம்புவது அக்மார்க் காமெடி. இதைப்போல அங்கங்கே துண்டு துண்டு வசனங்கள் பளீச்... பளீச்.
நல்லாருக்கு. ஆனா சரியா போகலேன்னு செய்திகள் சொல்லுது. காரணம் அந்த ஒரு நிமிட க்ளைமாக்ஸ் தான். வேறென்ன. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷமாய் அந்த க்ளைமாக்ஸ். இயக்குனர் ஜாதி இனியவர்களே... 99 சதம் படம் நல்லாருந்து ஒரு சதம் க்ளைமாக்ஸ் மட்டும் சொதப்புனா கூட படத்தை ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு "காதல் சொல்ல வந்தேன்"... கருத்து சொல்லுது. பாத்துங்கோங்க.

