பலே பாண்டியா - விமர்சனம்
வாழ்க்கையில் எதுவும் சரியாக அமையாத துரதிர்ஷடசாலி பாண்டியன்(விஷ்ணு). ஒரு கட்டத்தில் வாழ்க்கையே வெறுத்துப்போய் சாக முடிவெடுக்கிறான். தற்கொலை கூட அவனுக்கு கைகொடுக்க மறுக்கிறது. எத்தனை வழிகளில் தற்கொலை செய்ய முடிவெடுத்தாலும் எதுவும் கைகூடாமல் வெறுத்துப்போகிறான்.
இறுதியாக ஒரு தாதாவிடம் சென்று என்னைக்கொலை செய், பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்கிறான். தாதா இவனின் சின்னப்பிள்ளை தனத்தை புரிந்துகொண்டு சரி ஓ.கே. பத்தாந்தேதி உன்னைக்கொல்கிறேன். அதுவரைக்கும் என்ஜாய் பண்ணு 25 லட்சம் ரூபாய் பேலன்ஸ் உள்ள ஒரு ஏ.டி.எம் கார்டையும் கொடுக்கிறான். கூடவே இந்த கார்டும் நீயும் பத்தாந்தேதி எக்ஸ்பயரி ஆகிடுவீங்க என்று பஞ்ச் வைக்கிறான் தாதா.
இனிமே உங்களுக்கே கதை தெரிஞ்சிருக்காதா?. சாவு நிச்சயம்னு தெரியும்போது வாழும் ஆசை வருகிறது பாண்டியனுக்கு. சம்பங்களும் அதற்கேற்றார்போல் நடக்கின்றன. இடையில் வரும் பியாவின் காதலும் கைகூட அந்த 10ம் தேதியும் வந்துவிடுகிறது.
படபடத்து ஓடிப்போய் அந்த தாதாவிடம் ஓடுகிறான். நான் வாழ ஆசைப்படுகிறேன் என்று அவனிடம் சொல்ல இவன் ஓடினால்... அய்யோ பாவம் அந்த தாதாவை எவனோ போட்டுத் தள்ளிவிடுகிறான். மிச்ச சொச்ச கடத்தல் கண்ணாமூச்சி கதை எல்லாம் காட்டி கடைசியில் சுபம் அவ்வளவுதான்.
இறுதியில் இரண்டு நிமிடங்கள் போடுகிற டைட்டில் கார்டு அளவுக்கு படம் புத்திசாலித்தனமாக இல்லை என்பதுதான் சத்திய நித்தியமான உண்மை.
சென்னைக்கு வரும் வெளிநாட்டவர் பார்வையில் நமது வாழ்க்கை முறையை விவேக் கிண்டல் அடித்திருக்கிறது ஓ.கே. என்றாலும் ரொம்ப பழைய பல்லவி அது. அதனால் சோபிக்கவில்லை. போர்வெல் பள்ளங்களுக்கு மரக்கட்டை மூடி போடச்சொல்லுவது உருப்படியான ஐடியா.
செம்மொழி பாட்டு போல ஒரு பாட்டு நிறைய பாடகர்களை வைத்து. பரவாயில்லை. மற்றபடி எந்தப்பாடலும் மனதில் நிற்க வில்லை.
விஷ்ணு, பியா நடிப்பில் குறைவில்லை. இயக்குனரிடம் புத்திசாலித்தனம் இருப்பது தெரிகிறது, ஆனால் படத்தில் புத்திசாலித்தனம் இல்லை. பலே பாண்டியா பலமே இல்லாத பாண்டியா.

