ஒன்றரை கோடியில் மீனட்சி அம்மனுக்கு வைர கிரீடம்
ஒன்றரை கோடி மதிப்புள்ள புதிய வைரக்கிரீடம் மதுரை மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. ஒன்றரை கிலோ தங்கம், வைரம், மரகதம், மாணிக்க கற்களால் தயாரிக்கப்பட்ட அந்த வைரகிரீடத்தை அம்மன் அணிந்திருந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். மீனாட்சி அம்மனின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக மீனாட்சி அம்மனுக்கு புதிதாக ஒரு வைர கிரீடம் தயாரிக்கப்பட்டுள்ளது. 11/2 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, 300 காரட் எடையுள்ள வைரக்கற்கள், 154 காரட் எடை கொண்ட மரகத, மாணிக்க, கற்கள் பதிக்கப்பட்டுள்ள இந்த வைர கீரிடத்தை மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் ஏ.என்.சுப்பையா செட்டியார்-சரோஜாஆச்சி குடும்பத்தினர் உபயமாக வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு 11/2 கோடி ரூபாய் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
யாகசாலை பூஜையைத் தொடர்ந்து உபயதாரர்கள் அந்த வைர கிரீடத்தை காலை 9.30 மணியளவில் கோவிலுக்கு வழங்கினார்கள். அதன்பின் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து புதிய வைரகிரீடம் அணிவிக்கப்பட்டது. வைரகீரிடம் அணிந்து அலங்காரமாய் காட்சி அளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

