கூடங்குளம் போராட்டக்குழுவை அகற்ற பிரதமருக்கு சாமி வலியுறுத்தல்
"கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை, போராட்டப் பகுதியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தும்படி, தமிழக அரசுக்கு, பிரதமர் உத்தரவிட வேண்டும்,' என, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார். எனவே, 256வது சட்டப்பிரிவின் கீழ், கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும், முகாமிட்டுள்ள போராட்டக்காரர்களை உடனடியாக, அங்கிருந்து வெளியேற்றும்படி, தமிழக அரசுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
இதுகுறித்து போராட்டக்காரர்களுக்கு, எட்டு மணி நேர எச்சரிக்கை விடுக்க வேண்டும். பிரதமர் உத்தரவின்படி, தமிழக அரசு செயல்பட மறுத்தால், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை பதட்டமான பகுதிகளாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

