சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமண நாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் - ராகவா லாரன்ஸ் அறிக்கை

நடன இயக்குநராக திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் இயக்குநராக வெற்றியடைந்து தற்போது முன்னணி கதாநாயகனாக விளங்கும் ராகவா லாரன்ஸ், இயல்பிலேயே இரக்க மனம் படைத்தவர். அது மட்டுமல்ல சிறு வயதில் பல கஷ்டங்களையும் அனுபவித்தவர். அதன் காரணமாக, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. தற்போது நல்ல நிலையில் இருக்கும் ராகவா லாரன்ஸ், தன்னால் முடிந்த அளவுக்கு சேவைகளை செய்து வருகிறார்.

லாரன்ஸ் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி, தான் குடியிருந்த வீட்டிலேயே உடல் ஊனமுற்றோர், அனாதைகளுக்கான இல்லத்தைத் தொடங்கினார். இவ்விஷயம் ஊடகங்கள் மூலம் வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்ததும், பல உடல் ஊனமுற்றோர்களும், அனாதைகளும் லாரன்ஸைத் தேடி வர ஆரம்பித்தனர். அவர்களை தன் இல்லத்தில் தங்க வைத்து பராமரிக்க இடம் இல்லாததால், தன் சொந்த வீட்டையே அவர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்துவிட்டு தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார் லாரன்ஸ்.

லாரன்ஸின் அனாதை இல்லத்தைப் பற்றி கேள்விப்பட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த வருடம் தன் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடாமல், லாரன்ஸின் அனாதை இல்லத்துக்கு பதினைந்தாயிரம் நன்கொடை வழங்கினார். அதோடு, மாதம் தோறும் தொடர்ந்து பதினைந்தாயிரம் நன்கொடை வழங்கினார். தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமணத்தை முன்னிட்டு தன் அனாதை இல்லம் சார்பாக அவருக்கு தன் நன்றிக்கடனை தெரிவிக்க இருக்கிறார் லாரன்ஸ்.

இது பற்றி லாரன்ஸ் கூறியதாவது.. 'நான் நடத்தி வரும் அனாதை இல்லத்துக்கு மாதம் பதினைந்தாயிரம் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமண நாளை முன்னிட்டு, 03.09.2010 அன்று மதியம், அம்பத்தூரில் நான் கட்டியிருக்கும் ராகவேந்திரா கோவிலில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்க இருக்கிறேன். அதோடு சௌந்தர்யாரஜினிகாந்தின் திருமண வாழ்க்கை சிறக்கவும் என் இல்லத்து குழந்தைகள் சார்பாகவும் என் சார்பாகவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.'

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com