தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்தும் தொடர் தாக்குதல் - கருணாநிதி கடும் எச்சரிக்கை

தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்தும் தொடர் தாக்குதலால், விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கையில் உள்ள மீனவர்களாலும், சிங்களவர்களாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதாக வருகின்ற செய்திகள், மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சென்று, 'அமைதியை ஏற்படுத்திவிட்டேன், இனி தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் எத்தகைய தொந்தரவும் இருக்காது' என்று உறுதியளித்து விட்டு திரும்பிய சூழ்நிலையில் வருகின்றன.

சற்றும் எதிர்பாராதவிதமாக இலங்கை சிங்களக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் தமிழக மீனவர்களை கொடுமையாகத் தாக்கி, அராஜகம் புரிந்துள்ளனர் என்பது தமிழக மக்களுக்கு மிகுந்த கொதிப்பேற்றும் செய்தியாகும்.

அமைதி திரும்பும் என்று மத்திய மந்திரி கூறுவதும், அப்படி அவர் சொன்ன வாசகங்கள் அனைத்தும் கடல் காற்றிலேயே கரைந்து போவதும் தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகிறது. எனவே, இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு உடனடியாக இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும், தாமதிக்காமல் தலையிட வேண்டும். தாமதத்தை பொறுத்துக் கொண்டு தமிழக மீனவர்கள், சிங்களவர்களாலும் சிங்கள ராணுவத்தினராலும் தாக்கப்படுகின்ற கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாதென்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com