தி.மு.க. ஆட்சிக்கு முடிவு வரும் - ஜெயலலிதா

தி.மு.க. ஆட்சி குறித்தும், முதல்வர் கருணாநிதி குறித்தும் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எனவே, தி.மு.க. ஆட்சிக்கு முடிவு வந்து விடும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் ஓராண்டுக்கு முன்பே போர் முடிந்துவிட்டது. எனினும் அங்குள்ள தமிழ் மக்கள் தொடர்ந்து கொடுமைக்கு உள்ளாகின்றனர். தமிழ்ப் பெண்கள் மீதான ராணுவ வீரர்களின் பாலியல் வன்முறை உள்பட பல கொடுமைகள் அங்கு நடக்கின்றன.

ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசை, குற்றவாளி நாடு என பிரகடனப்படுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி  இதுபற்றி கவலைப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற சோக நிகழ்வுகள் காரணமாக தமிழ் மாநாடு நடத்துவது சரியில்லை என்ற கருத்து பற்றி கவலைப்படாமல், கோவையில் தமிழ் மாநாட்டை நடத்தினார்.

இந்நிலையில் 3.7.2010 அன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி ஒரு கடிதம் எழுதினார். இலங்கையில் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் ஏதாவது செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து 9.7.2010 அன்று கருணாநிதிக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில், இலங்கை இனப் பிரச்னையை தீர்ப்பதற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.

மீண்டும் 16.7.2010 அன்று பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். அதில், இலங்கை நாட்டுக்குள் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது மிகவும் அவசரம். மேலும் அங்குள்ள உண்மை நிலைமையை கண்டறிவதற்காக ஒரு குழுவை இந்தியா அனுப்ப வேண்டும் என்று எழுதியிருந்தார். இதிலிருந்து ஏற்கெனவே தன்னால் அனுப்பப்பட்ட தமிழக எம்.பி.க்கள் குழு போலியானது என்பதையும், இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்த அந்தக் குழுவின் மதிப்பீடு உண்மைக்கு மாறானது என்பதையும் கருணாநிதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே, தன்னுடைய கபட நாடகத்தில் பல புதிய திருப்பங்களையும், மாற்றங்களையும் அவர் செய்வார் என்பது உறுதி. எனினும் கருணாநிதியை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொண்டு விட்டனர். எனவே, தி.மு.க. ஆட்சிக்கு முடிவு வரும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

Tags

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com