பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - ஜெயலலிதா
பணியின்போது இறந்த 76 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில், சென்னை மாநகராட்சியில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த 76 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது உயிரிழந்த 76 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் நான்காம் நிலை பணிகளான துப்புரவு பணியாளர் பணிக்கான பணி நியமன ஆணை 56 நபர்களுக்கும், சாலை பணியாளர் பணிக்கான பணி நியமன ஆணை 10 நபர்களுக்கும், மருத்துவமனைகளில் ஆயாக்கள் பணிக்கான பணி நியமன ஆணை 10 நபர்களுக்கும், என மொத்தம் 76 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி, பணியாளர்கள் தங்கள் பணியில் சிறப்புற பணியாற்ற வாழ்த்தினார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்ட பணியாளர்கள் தங்கள் வாழ்வில் விளக்கேற்றியமைக்காக தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர், தலைமைச்செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உடனிருந்தனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

