பூனா அணியின் பயிற்சியாளராக ஜெஃப் மார்ஷ் நியமனம்
ஐபிஎல் பூனா வாரியர்ஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஜெஃப் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் டெர்மாட் ரீவ் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அணியின் உரிமையாளரும், சஹாரா நிறுனவத்தின் தலைவருமான சுப்ரதா ராய் லக்னெüவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் பூனா வாரியர்ஸ் அணியில் உத்தரப் பிரேதச மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
எந்த அணியும் பயிற்சியாளருக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் நாங்கள் ஆஸ்திரேலியாவின் ஜெஃப் மார்ஷை பயிற்சியாளராகவும், இங்கிலாந்தின் மார்டெல் ரீவை துணை பயிற்சியாளராகவும் நியமித்துள்ளோம் என்றார். இந்தியாவைச் சேர்ந்தவர்களை பயிற்சியாளராக நியமிக்காமல் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை பயிற்சியாளராக நியமித்திருப்பது குறித்து சுப்ரதா ராயிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
கடந்த கால சாதனைகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டுதான் அவர்கள் இப்போது பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் என்பது இந்தியாவில் மட்டும் விளையாடுவது அல்ல; உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது என்றார் சுப்ரதா ராய்.
ஜெஃப் மார்ஷ் 117 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். 2001 முதல் 2004 வரை ஜிம்பாப்வே அணிக்கு பயிற்சியளித்தார்.

