யுவராஜ் சதம் அடித்தார்
இலங்கை வாரியத் தலைவர், இந்திய அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமாக விளையாடியது. எனினும் ஒரு ஆறுதலாக நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த ஆட்டத்தில் யுவராஜ் சதம் அடித்தார். கம்பீர் 89 ரன்கள் வரை நிலைத்து நின்று விளையாடினார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர், அதன்பிறகு நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடர் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணி-இலங்கை வாரியத் தலைவர் அணி பங்கேற்கும் 3 நாள் பயிற்சி ஆட்டம் செவ்வாய்க்கிழமை துவங்கியது.
இலங்கை வாரியத் தலைவர் லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 514 ரன்கள் எடுத்தது. இலங்கையின் உபுல் தரங்கா, கண்டம்பி, சமரவீரா ஆகியோர் சதமடித்தனர். 5 விக்கெட் இழப்புக்கு 432 ரன்களுடன் 2-ம் நாள் ஆட்டத்தை இலங்கை புதன்கிழமை தொடர்ந்தது. ஜே.கே. சில்வா 19 ரன்களுக்கும், சேனநாயகே 11 ரன்களுக்கும், மெண்டிஸ் 10 ரன்களுக்கும், வெலெகெடாரா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சண்திமல் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய தரப்பில் பிரக்யான் ஓஜா 25 ஓவர்களில் 133 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 514 ரன்களை எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ûஸ 104.3 ஓவரில் டிக்ளேர் செய்தது. பாலோ ஆனை தவிர்க்க 315 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கிய இந்திய அணி, 64.2 ஓவரில் 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்த போட்டியில் இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸின் அபாரமான பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.
இந்த போட்டியில் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங்கின் ஆட்டம் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. முதலில் களமிறங்கிய கம்பீர் 89 ரன்கள் எடுத்த நிலையில் மெண்டிஸின் பந்து வீச்சில் தரங்காவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து களமிறங்கிய சேவாக் 18 ரன்களுக்கும், டிராவிட் 11 ரன்களுக்கும், டெண்டுல்கர் 4 ரன்களுக்கும், லட்சுமண் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் 146 பந்துகளில் 118 ரன் எடுத்தார். 6 சிக்ஸர்களையும் 11 பவுண்டரிகளையும் குவித்த யுவராஜ், சேனாநாயகேவின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் தோனி 10 ரன்களுக்கும், மிஸ்ரா 1 ரன்னுக்கும், இஷாந்த் சர்மா 5 ரன்னுக்கும், ஓஜா 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மிதுன் 9 ரன்கள் எடுத்தார். இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலுமே மிகவும் மோசமான நிலையில் உள்ளதை எடுத்துக் காட்டுவதாக பயிற்சி ஆட்டம் அமைந்துள்ளது.

