காமத்துப் பாலில் நனைத்த தேன்மொழியின் 1000 முத்தங்கள்!
இசையமைப்பாளர் தாஜ்நூரின் ஒலிப்பதிவுக்கூடம். சென்று அமர்ந்த சில நொடிகளுக்குள் நான் தான் ஷண்முகராஜன், தேன்மொழி மற்றும் தேன்மொழியின் முத்தங்களின் இயக்குநர் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். மன்னிக்கவும். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தின் இயக்குநர் என்று மாற்றி வாசித்துக்கொள்ளுங்கள்.
சேரனின் பட்டறையில் இருந்து புறப்படும் இன்னொரு இயக்குநர் ஷண்முகராஜன். ஜேடி ஜெர்ரியிடமும் பணி புரிந்த அனுபவமும் கொண்ட ஷண்முகராஜன், முதல் முயற்சியிலேயே ரெண்டு படம் எடுத்திருக்கிறார்.
ஆஹா என்று ஆச்சர்யப்படுகிறீர்களா... உங்கள் ஆஹாவிற்கு அர்த்தம் இருக்கிறது. அந்த அர்த்தம் நீங்கள் நினைப்பது இல்லை. அதாவது முழுப்படத்தையும் முதலின் ஹேண்டி கேமராவில் எடுத்து எடிட் செய்து பார்த்து பார்த்து விட்டு, பின் ஒரிஜினல் படத்தை எடுத்திருக்கிறாராம். ரொம்ப பொறுமைசாலியா இருப்பார் போல.
திருவண்ணாமலையில் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு பிடிச்சி, குளிரூட்டப்பட்ட வீடாக மாற்றி கதாநாயகன் கதாநாயகி உள்பட 71 புதுமுகங்களை அந்த வீட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்க வச்சி... ஆமாங்க கிட்டத்தட்ட 372 நாட்கள் எல்லாருமே சேர்ந்து வாழ்ந்து விட்டே வந்திருக்கிறார் மனுஷன். விட்டா 1000 முத்தங்களுக்கு சமமா 1000 நாட்கள் ரிகர்சல் பண்ணிருந்தாலும் பண்ணிருப்பார்.
படத்தில் ஏகப்பட்ட புதுமைகள் செய்திருக்கிறோம் என்று அவர் பேசப்பேச நமக்கும் அப்படி என்னதான் செய்திருக்கிறார் என்று பெரிய ஆவல் வந்து விடுகிறது.
ரொம்ப நேரமாக அமைதியாக ஷண்முகராஜன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த இசையமைப்பாளர் இப்போது தன் புதுமைகள் பற்றி பேச ஆரம்பித்தார்.
அதாவது வழக்கமா ஒரு படம் ஆரம்பிக்கும்போது நாயகன், நாயகி பற்றி பின்னணிக் குரல் மூலமாக அறிமுகம் செய்வார்கள். அவர்கள் அந்த அறிமுகத்தையே ஒரு பாட்டாக மாற்றி இருக்கிறார்களாம். அந்த செய்தியை சொன்ன கையோட அந்தப் பாட்டையும் போட்டு காட்டினார் இசை. அட, நல்லாருக்கேன்னு அவர் கிட்டயே நம்ம சொல்ல வச்சது அந்தப் பாட்டு.
அதுக்கப்புறம் இன்னொரு பாட்டு. திருக்குறளின் காமத்து பாலில் இருந்து 10 திருக்குறள்களை எடுத்து அதன் பொருளையே பாட்டாக மாற்றி இருக்கிறார்கள். அந்தப் பாட்டையும் உடனே கேட்க ஏற்பாடு செய்தார்கள். "பாலோடு தேன் கலந்தற்றே" எனத் தொடங்கும் அந்தப் பாடலை யுகபாரதி எழுதி இருக்கிறாராம்.
தேன்மொழியின் ஆயிரம் முத்தங்களையும் வள்ளுவனின் காமத்துப்பாலில் நனைத்து கதை சொல்லி இருக்கும், ஷண்முகராஜன் கடைசியாக சொன்ன விஷயம் உங்களுக்கும் படம் பார்க்கும் ஆவலை கூட்டும்.
அது, "படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது நீங்க யாரை லவ் பண்ணப் போறீங்க, எப்போ கிஸ் பண்ணப் போறீங்க" அப்டிங்கிற விஷயம் உங்களுக்கே தெரியும் என்று அடிச்சி காதல் ஜோசியம் சொல்றார். நான் யாரை லவ் பண்ணப்போறேன்னு தெரிஞ்சிக்க ரொம்பவே ஆசையா இருக்கேன். (தயவு செய்து எத்தனையாவது காதல்னு கேட்காதீங்க.)

