யு.எஸ்., ஓபன் கடின சுற்றில் சோம்தேவ்
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில், இளம் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் கடின சுற்றில் இடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு, இளம் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மனுக்கு கடின சுற்றாக அமைந்துள்ளது. உலகின் "நம்பர்-64' வீரரான இவர், முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை (நம்பர்-4) எதிர்கொள்கிறார். ஏ.டி.பி., அரங்கில், இவர்கள் இருவரும் முதல் முறையாக மோத உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதித்த சோம்தேவ், இந்த ஆண்டு பெரிய அளவில் சோபிக்கவில்லை. கடந்த 2009ல் நடந்த யு.எஸ்., ஓபனில், இரண்டாவது சுற்றுவரை முன்னேறிய இவர், கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே குறைந்தபட்சம் காலிறுதிக்கு முன்னேற முடியும்.
இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா, பெண்கள் ஒற்றையர் பிரிவில் சுலப சுற்றில் இடம் பெற்றுள்ளார். இவர், முதல் சுற்றில் இஸ்ரேல் வீராங்கனை ஷகர் பியரை சந்திக்க உள்ளார். இவர்கள் இருவரும், இதுவரை ஐந்து முறை மோதியுள்ளனர். இதில் சானியா 4, ஷகர் பியர் ஒரு போட்டியில் வெற்றி பெற்றனர். சானியா, கடந்த 2005ல் நடந்த யு.எஸ்., ஓபனில், நான்காவது சுற்று வரை முன்னேறினார். சமீபகாலமாக முதல் சுற்றோடு வெளியேறி வரும் இவர், கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில் பட்டம் வென்று சாதிக்கலாம்.

